வாழ்வில் அனைவருமே ஏதோ ஒரு கட்டத்தில் விரக்தி ஏற்பட்டு தற்கொலை கூட செய்து கொள்ளலாமா என்று யோசித்திருப்பார்கள். இன்னும் சிலருக்கு அடிக்கடி தற்கொலை எண்ணங்கள் தலைதூக்கிய படியே இருக்கும்.
ஆனால், தற்கொலை செய்து கொள்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு அளவிற்கதிகமான மன தைரியம் வேண்டும். வலிகளைத் தாங்கி கொள்ள முடியாத தருணம் என்று ஒன்று ஒருவருக்கு வாழ்வில் ஒருமுறையேனும் வரக்கூடும்.
அந்த சமயத்தில் ஒருவர் தன் மனக் கட்டுப்பாட்டின் எல்லையை மீறும் போது, தற்கொலை முடிவை எடுக்கிறார். தற்கொலை எண்ணங்களை முறியடிப்பதற்கான சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
நல்ல உறவுகள்
உங்களைச் சுற்றி நல்ல விஷயங்களைப் பேசுவதற்கு உறவுகள் இருப்பதே தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்கும் ஒரு வழியாக அமையும். நல்லதொரு கூட்டத்துடன் நல்ல நடவடிக்கைகளில் ஈடுபடும் போது தற்கொலை எண்ணங்கள் உங்களை நெருங்காது. எனவே தற்கொலை எண்ணங்கள் அடிக்கடி தலை தூக்கினால் தனிமையில் இருப்பதைத் தவிர்த்து விடுங்கள்.
எதிர்மறை எண்ணங்களைப் பரப்புபவர்கள், உங்கள் தன்னம்பிக்கையைக் குழைப்பவர்கள் ஆகியோர்கள் எவ்வளவு நெருங்கிய நண்பர் அல்லது உறவினராக இருப்பினும் அவர்களிடம் இருந்து விலகியே இருங்கள்.
நேர்மறைச் சிந்தனைகள்
எதிர்மறையான எண்ணங்களைப் போக்க மகிழ்ச்சியான நினைவுகள் கூடத் தேவையில்லை. அதற்குப் பதிலாக சமநிலையுடனான எண்ணங்களை அதிகமாகக் கொண்டு வர வேண்டும். தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்க இதுவும் ஒரு முக்கியமான அம்சமாகும். இதனை மேம்படுத்த நேர்மறையான மக்களுடன் பழகி, எதிர்மறையாகச் சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்.
எப்போதும் வாழ்வின் மீது குறை பட்டுக் கொண்டிருப்பவர்கள், தங்கள் குற்றத்திற்கு அடுத்தவர்கள் மீது பலி போடுபவர்களை அருகிலேயே சேர்க்காதீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் அதில் இருக்கும் நேர்மறை விஷயத்தையே பார்த்துப் பழகுங்கள். இது ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தாலும் போகப் போக பழகி விடும்.
யோகா மற்றும் தியானம்
மன அழுத்தத்தைக் கையாள யோகா ஒரு சக்தி வாய்ந்த கருவியாகப் பயன்பட்டு வருகிறது. இதனால் உங்கள் தற்கொலை எண்ணமும் தொலைந்து போகும். ஆரோக்கியமான உடலுக்குத் தேவையானதெல்லாம் தினமும் யோகா மற்றும் தியானம் மட்டுமே. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சமநிலையைக் கொண்டு வருவதற்கு யோகா பெரிதாக உதவிடும்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் உடற்பயிற்சிகளையும் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
பிறருக்கு உதவுங்கள்
பிறருக்கு உதவி செய்வது ஒரு நன்மை பயக்கும் போதையாகும். மற்றவர்கள் கவலையிலிருந்து விடுபட அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். அதன் மூலம் உங்களின் தன்னம்பிக்கை மேம்படும்.
இனியெல்லாம் வசந்தமே
வாழ்வின் மோசமான பகுதியைக் கடந்து விட்டோம். இனிமேல் நமக்கு வசந்தம் தான் என்று நினைக்க ஆரம்பித்தால் எதிர்மறை எண்ணங்களைக் களைய முடியும். பல பேருடைய வாழ்வை நகர்த்திக் கொண்டிருப்பதே ‘இதுவும் கடந்து போகும்‘ என்ற ஒற்றை வாக்கியம் தான். எனவே, எதிர்மறையான எண்ணங்களைத் துடைத்துத் தூக்கி எறிந்து விட்டு மகிழ்வாக வாழத் தொடங்குங்கள்.