கஜா புயல் எப்போது கரையை கடக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கும், என்னவாகுமோ என்ற கலக்கத்திற்கும் மத்தியில், நள்ளிரவு 12 மணியளவில் நாகை, வேதாரண்யம் இடையே அது கரையை கடக்கத் தொடங்கியது.
புயலின் முன் பகுதி கரையைத் தொடத் தொடங்கிய அந்த நேரத்தில் நாகை, கடலூர், காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. புயல் கரையைக் கடக்கத் தொடங்கிய போது புதுச்சேரியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. ஆனால், வேதாரண்யம், நாகை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் 100 முதல் 130 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசியது.
பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் கஜா புயலின் கண்பகுதியில் முதல் பகுதி கரையை கடந்தது. அதன்பின்னர் காற்றின் வேகம் மேலும் அதிகரித்தது. கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூரில் பெரும்பாலான பகுதிகளில் சூறைக்காற்றினால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதேபோல் மின்கம்பங்களும் புயல் காற்றினால் சேதமடைந்தன. காரைக்காலில் மின்மாற்றி மீது மரம் சாய்ந்து விழுந்ததில் மின்மாற்றி வெடித்துச் சிதறியது. இதனால் 6 மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தொலைதொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 81 ஆயிரம் பேர் அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கஜா புயல் கரையை கடந்த நாகை மாவட்டம் கடும் சேதத்தை சந்தித்து வருகிறது. இதில் வேதாரண்யம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து காற்றுடன் கூடி கன மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை செய்வதில் தொடங்குதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. புயல் பாதிப்புகள் காரணமாக இரண்டு பேர் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் கோர தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு உள்ளிட்ட கிராமங்களில் காற்றின் வேகததில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை தூக்கி எரியப்பட்டது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மா, பலா, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தது. காற்றின் வேகத்தில் அப்பகுதி கிராமங்கள் சூறையாடப்பட்டு வருகிறது. காற்றின் வேகம் இப்போதுவரை குறைந்த பாடில்லை. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மல்லிப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மரங்கள், மின்கலங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் பாதிப்புக்குள்ளான 7 மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் 23 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கஜா வலுவிழக்க இன்னும் 5 மணி நேரமாவது ஆகும் என்பதால் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.