இன்று விண்வெளி ஆராய்ச்சியின் மகத்தான சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்களை எல்லாம் அலறவிடும் ஒரு விஷயம் என்றால் அது சாக்ஷாத் கருந்துளை தான். அண்டத்தில் அது எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது என்பது குறித்து யாருக்கும் தெரியாது. இதுவரை வந்தவை எல்லாம் வெறும் ஊகங்கள் மட்டுமே. அதன் நிறை, ஈர்ப்பு ஆற்றல் என அனைத்தையும் அறிந்துகொள்ள முடிந்த மனிதனால் அதனைப் புகைப்படம் பிடிக்க இயலவில்லை. ஆனால் இன்று அது நடந்தேவிட்டது.
50 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் மெசியர் 87 (Messier 87) என்னும் அண்டத்தில் தான் இந்த கருந்துளை அமைந்திருக்கிறது. இதன் எடை 650 கோடி சூரியனின் எடைக்குச் சமம் என்கிறார்கள் இந்த ராட்சத கருந்துளையை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்.
ஈவன் ஹரிசான் டெலஸ்கோப் ப்ராஜெக்ட் (Event Horizon Telescope) என்னும் குழுதான் பல வருட விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கனவை நிறைவேற்றியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 200 வானியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்ரலில் மெசியர் அண்டத்திலிருந்து இந்த கருந்துளையின் தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த புகைப்படங்களை ஒன்று சேர்க்க அவர்களுக்கு ஒருவருடம் ஆகியிருக்கிறது.
ஏன் ஒருவருடம் என்கிறீர்களா? உலகம் முழுவதும் இந்த ஆராய்ச்சிக்காக அதிநவீன தொலைநோக்கிகள் நிறுவப்பட்டிருந்தன. உதாரணமாக ஹவாய் தீவில் ஒன்று இருக்கிறது. தென் துருவத்தில் ஒன்று. வட துருவம், தென்னமெரிக்கா என உலகம் முழுதும் விரிந்திருந்த தொலைநோக்கிகளில் பதிந்திருந்த தகவல்களில் இருந்து இந்த ஒரு கருந்துளை பதிவாகியிருக்கும் இடத்த மட்டும் எடுத்து ஒன்று சேர்க்க வேண்டும்.
ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்த மொத்த தகவல்கள் எவ்வளவு தெரியுமா? ஐந்து பெட்டாபைட்டுக்கும் அதிகமாம். ஒரு பெட்டாபைட் என்பது 50 லட்சம் ஜி.பி. யோசித்துப்பாருங்கள் ஐம்பது லட்சம் புகைப்படத்தையும் அலசி ஆராய்ந்து இந்த ஒரு புகைப்படத்தை எடுக்க வேண்டும்!!
கருந்துளையை படம் பிடிக்க உதவிய தொலைநோக்கிகளின் இருப்பிடம்
எடுத்துக்காட்டு சொன்னால் இந்த உழைப்பின் வீரியம் புரியும். இந்த ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்த போட்டாக்கள், 40,000 பேர் தங்களது வாழ்நாள் முழுவதும் எடுக்கும் செல்பிக்களுக்குச் சமம். அப்படியென்றால் இது எத்தனை சவாலான விஷயம் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.
சாதனை – சாட்சி
இது குறித்துப்பேசிய இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் ஷீப் டோலமேன், ” கருந்துளை பற்றி இதுவரை பல தகவல்கள் வெளிவந்துள்ளன. விண்வெளியில் அவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சிகள் யாவும் நேரடியாக மேற்கொள்ளப்பட்டவை அல்ல. (அதாவது ஓரிடத்தில் கருந்துளை இருப்பது அவ்வழியே பயணிக்கும் மேகக்கூட்டங்களில் ஏற்படும் மாற்றத்தினை வைத்தே உறுதி செய்யப்பட்டு வந்தது.) ஆனால் இன்று கருந்துளை எப்படி இருக்கும் என்பதற்கு இந்த புகைப்படம் சாட்சியாய் இருக்கிறது. இதற்காக எத்தனையோ இரவுகள் கண்விழித்துள்ளோம். அதற்கான பலன் இப்போது கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறோம். இது மனித குலத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்று” என்றார்.
மற்றொன்று…
இந்த குழு நம் பால்வழி அண்டத்தில் இருக்கும் சகிட்டாரியஸ் ஏ (Sagittarius A) என்னும் கருந்துளையைத் தான் ஆராய்ச்சி செய்திருக்கிறது. இதன் எடை 40 லட்சம் சூரியனின் எடைக்குச் சமமாகும். ஆனால் அதற்குப் பின்னர்தான் மெசியர் கண்ணில் பட்டிருக்கிறது. சகிட்டாரியஸ் நமக்குப் பக்கம் தான் என்றாலும் அதனைச் சுற்றியுள்ள பொருட்களின் இயக்கத்தால் அதனை சரிவர கண்காணிக்க இயலவில்லை. மெசியரின் இந்த பிரம்மாண்ட கருந்துளையைப் பற்றி இதுவரை ஆறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்பட்டிருகின்றன.
அன்றே சொன்ன ஐன்ஸ்டீன்
1915 ஆம் ஆண்டிலேயே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கருந்துளையைப் பற்றிய புரட்சிகரமான கருத்துகளை முன்வைத்தார். அதன் வடிவம் குறித்த அவரது சிந்தனைகள் அனைத்தும் மிகச்சரி என்று ஆராய்ச்சியாளர்கள் இன்று ஒப்புக்கொண்டுள்ளனர்.
டோலமேன் சொன்னதுபோல் வரலாற்றின் மிக முக்கிய சாதனை நம் கண்முன்னே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் இன்னும் நம் தலைக்கு மேலே உள்ள வானம் பல ரகசியங்களை இருட்டில் மறைத்து வைத்திருக்கிறது. காலம் அவை அனைத்தையும் கூடிய விரைவில் விடுவிக்கும் என நம்பலாம்.