சொந்த வீடு என்பது பெரும்பாலானவர்களின் கனவாக இருக்கிறது. ஏனெனில் அது அந்தஸ்த்தின் குறியீடாகவும், தங்களின் அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைக்க ஆசைப்படும் சொத்தாகவும் கருதப்படுகிறது. சொத்து வாங்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனென்றால், அவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன. எனவே, சொத்து வாங்கும் முன் நமக்குத் தெரிந்திருக்க வேண்டிய, நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்களை இங்கே இரண்டு பகுதிகளாகக் காண்போம்.
பொதுவாக மக்களுக்கு, நிலம்/வீடு வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்களை சரி பார்க்க வேண்டும், மற்றும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்தத் துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை.நிலம் வாங்குவதற்கு முன், அவற்றைப் பற்றிய முழு விவரங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது.
நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.
ஒவ்வொரு மாவட்டமும், பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர். நிலம் தொடர்பான விவரங்கள் இரு துறைகளில் பராமரிக்கப்படுகின்றன.
1. பதிவுத்துறை.
2. வருவாய்த்துறை.
அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்.
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office) அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.
இந்தத் துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேடுகளில் இருக்கும்.
பட்டா (Patta) :
நிலத்தின் உரிமை நமக்குத் தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும். பட்டாவை வைத்துத் தான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும்:-
1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்,
2. பட்டா எண்,
3. உரிமையாளர் பெயர்,
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision),
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்ற விவரங்கள்,
6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை,
சிட்டா (Chitta) :
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.
அடங்கல் (Adangal) :
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.
‘அ’ பதிவேடு (‘A’ Register) :
இப்பதிவேட்டில்,
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision),
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) : நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .
நீங்கள் சொத்து வாங்கும் முன் உங்கள் விற்பளையாளரின் கிரயப் பத்திரம் அசல் பத்திரம்தானா என்று உறுதி செய்யப் பட வேண்டும். ஏனெனில் போலிப் பத்திரங்கள் மூலம் ஏமாறும் நபர்கள் ஏராளம். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள் இருக்கும்.
1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி,
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி,
3. எவ்வளவு அளவு,
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது,
5. சொத்து விவரம்,
சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.
கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும். அவையாவன,
முத்திரைத்தாள் என்றால் என்ன? சொத்து வாங்க முத்திரைத்தாள் அவசியமா? முத்திரைத்தாள் வாங்கும் வழிமுறைகள் என்னென்ன? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.