பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அந்தக் கட்சியின் தலைவர் அமித் ஷா, மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். சங்கல்ப் பத்திரம்” என பாஜகவால் அழைக்கப்படும் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 12 பேர் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.
75 முக்கிய அம்சங்கள்
2022ம் ஆண்டு இந்தியா கொண்டாட இருக்கும் 75வது சுதந்திர தினத்திற்கு ஏற்றவகையில் 75 முக்கியமான அறிக்கைகளை வெளியிட உள்ளது பாஜக. இந்தியாவில் இருக்கும் கோடிக் கணக்கான மக்களிடம் கலந்தாலோசனை செய்து இந்த உறுதி மொழிப்பத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உறுதி மொழியினை நிறைவேற்ற மக்கள் எங்களுக்கு உதவுவார்கள் என்று அமித் ஷா தன்னுடைய உரையில் கூறியுள்ளார்.
- தீவிரவாதத்திற்கு எதிராக சமரசம் இல்லாமல் செயல்படுவோம். அதிக தொழில் நுட்ப வசதிகள் கொண்ட புதிய ஆயுதங்கள் கொண்டு, தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும். வடகிழக்கு இந்தியாவில் அத்துமீறி உள் நுழைபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
- விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரெடிட் கார்ட் வழங்கப்படும். 60 வயதிற்கு மேலான சிறு குறு விவாசயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். 5 ஆண்டுகள் வரை வட்டியில்லாத கடன் வழங்கப்படும்.
- 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும். ஸ்வச் பாரத் திட்டத்தின் படி 100% தூய்மை இந்தியா உருவாக்கப்படும்.
- மாநில அரசுடன் முறையான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு ஜி.எஸ்.டி. எளிமைப்படுத்தப்படும்.
- பெண்களுக்கு மாநிலங்களவை மற்றும் மக்களவையில் 33% இட ஒதுக்கீடு அளிக்க சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும்.
- நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கனவுத்திட்டமான இந்த திட்டம் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்.
- கால சூழல்களுக்கு ஏற்றவகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும்.
- முத்தலாக் சட்டம் நிறைவேற்று இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
- நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
- சம்ஸ்கிருத மொழியினைப் பரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
- 2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்படும்.
- கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.25 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
- ராமர் கோயில் கண்டிப்பாக கட்டப்படும்.
- 60 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.
- சிறு விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு ரூ.6,000 அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.