கல்வி

பொறியியல் மாணவர்களின் பாடத்திட்டத்தில் மாற்றம் – AICTE அறிவிப்பு

இந்தியாவில் வருடந்தோறும் லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள் வேலையில்லா திண்டாட்டத்தினால் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். அதற்கு முக்கியக்காரணம் வேலைக்கும் கல்விக்குமான இடைவெளி அதிகரித்ததே. தொழில்நுட்பம் சார்ந்த எந்த அடிப்படையையும் மாணவர்கள் கல்லூரிக்காலத்தில் கற்க வாய்ப்பில்லாமல் போவதும் இந்த நிலைக்கு மற்றுமொரு காரணம். நிறுவனங்கள் எதிர்பார்க்கும் பொறியியல் அறிவு மாணவர்களிடம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. தேர்வுகளில் மட்டுமே வெற்றி பெரும் பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்பிலும் கோலோச்சுவதற்கு துணைபுரியும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்கம் (AICTE). அதன்படி மாணவர்கள் அனைவரும் Internship எனப்படும் உள்ளிருப்புப் பயிற்சியை கல்லூரியின்போதே முடித்திருக்க வேண்டும்.

Credit: AICTE

புது திட்டம்

பொறியியல் மாணவர்களுக்கு இதன்மூலம் 14 – 20 என கிரெடிட் வழங்கப்படும். ஒவ்வொரு கிரெடிட்டிற்கும் மாணவர்கள் 40 முதல் 45 மணி நேரம் உள்ளிருப்புப் பயிற்சியை மேற்கொண்டிருக்கவேண்டும். டிப்ளமோ மாணவர்களுக்கும் 10 – 14 வரை கிரெடிட் உண்டு. அதாவது ஒரு பொறியியல் மாணவர் சராசரியாக 600 – 700 மணி நேரம் இப்பயிற்சியை மேற்க்கொண்டால் மட்டுமே கிரெடிட்களைப் பெற முடியும்.

ஒவ்வொரு பொறியியல் மாணவரும் நான்கு வருட மதிப்பெண்கள் தவிர்த்து கூடுதலாக 100 Activity Point – களைப் பெறவேண்டும். இந்த மதிப்பெண்கள் மாணவர்களின் தலைமைப்பண்பு, தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த திட்டங்கள், குழு நடவடிக்கை மற்றும் தனிநபர் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும்.

இவைபோக தொழில்முனைவோருக்கான பயிற்சி, செமினார், ஆராய்ச்சி, உள் மற்றும் வெளி பல்கலைக்கழகங்கள் நடத்தும் திறன்சார் வகுப்புகளில் கலந்துகொள்வோருக்கும் தகுந்தாற்போல் கிரெடிட் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன் என்ன ?

AICTE – யின் இந்தப் புதிய அறிவிப்பினால் பல நன்மைகள் நடைபெற வாய்ப்பிருக்கின்றன. நிறுவனங்களில் பின்பற்றப்படும் யுக்திகள் மற்றும் அங்குள்ள சூழலை மாணவர்கள் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும் இதனால் நடைமுறை அறிவியலின் போக்கு மற்றும் திறன்சார் கல்விக்கான முக்கியத்துவத்தையும் மாணவர்கள் பெற வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

Credit: Innoovatum

தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையம் (T&P Cell) ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. அதனை நிர்வகிக்கும் மொத்த செலவில் ஒரு சதவீதத்தினை இந்த பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

மாணவர்கள் தங்களது துறை சம்பந்தமான நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு கல்லூரியின் அனுமதியின் பெயரில் விண்ணப்பிக்க வேண்டும். பொறியியல் மாணவர்கள் தங்களது இரண்டு, நான்கு, ஆறு மற்றும் ஏழாம் செமஸ்டர்களில் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இந்தப் பயிற்சிக்கான அறிவுரைகள் மற்றும் விதிமுறைகள் AICTE மற்றும் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் அளிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு மாணவர்கள் http://www.aicteinternships.in என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

Show comments